வாழ்க்கை என்பது நீண்ட பயணம், இது புதிய கூற்றல்ல
நம் பயணத்தில் நல்ல துணை கொண்டால்
பாதைகளும் பூக்கள் நிறைந்த மெத்தை தான்
செல்லும் தூரமும்  நல் நினைவுகள் எனும் செல்வம் தான் !
தாயிற்சிறந்த கோவிலும் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
இந்த கூற்றில் ஏன் தமையன் இல்லை என நான் கேட்க தான் வேண்டும்..
ஆம்!
அன்பும் அறிவும் கலந்த தாய் தந்தையுடன்
என் உடன் பிறந்த தமையனும் என் பயணச் சக்கரங்களின் அச்சாணிகள்..
என் கண்கள் கண்ணீர் காணாமல் பார்த்துக்கொண்டு
கண்ணீர் மழையில் அன்னையுடன் சேர்ந்து நனைந்த ரத்த பந்தம் அவன்..
ஒரு முகம் வாடினால் இன்னொருவன் தசை ஆடும்
ஒரு கண் கண்ணீர் சொறிந்தால்
மறு கண்களில் குருதியே கொட்டும்..
இரண்டு சிங்கக்குட்டிகள் என
தந்தை எங்களுக்குள் ஊட்டி வளர்த்த பந்தம்..
மொட்டு.. பட்டு..
உங்கள் மனதில் அதே சகோதரம் விதைத்தால்
அதுவே என் வாழ்வின் சாதனை..
உங்கள் சகோதரத்துக்கு நாங்களே எடுத்துக்காட்டாய் இருப்போம்..
என் வாழ்க்கை எனும் பேருந்தில் நான் சந்தித்த பயணிகள் பலர்
படியில் ஏற்றி விட்டோரும் உண்டு
அவர்கள் அறியாமல் என்னை இறக்கி  விட முயன்றோரும் உண்டு
பிறந்த நாள் முதலாய் உடன் வரும் பயணிகளும் உண்டு
அவர்களில் என் மனம் வருந்த விரைவில் விடை பெற்றுகொண்டோரும் உண்டு
பாதி வழியில் ஏறி என் பயணத்தை அர்த்தமுள்ளதாக்கும் பயணிகளும் உண்டு!
என் கடந்த கால பயணத்தின் நினைவுகள் என் மனதில் ஓவியமாய் குடி கொண்டிருக்க
இனி வரும் காலத்தின் சில நினைவுகளை இங்கே பதிகிறேன்..!
நான் பிறந்த பொழுது இறைவன்  கலையுணர்வில் களித்திருந்தான் போல
எனக்கென மறு பாதியை சிலையாக வடிக்க ஆரம்பித்தான்
நான் பிறந்து, பின்னர்
ஆறு வருடங்கள் ஆகினவாம் அப்படி ஒரு அன்பும் பண்பும் கலந்த அழகை சிந்தித்து சிலையமைக்க..
ஆனால்..
அவன் முயற்சி அவளை படைத்தோடு நிற்கவில்லை!
இருவரையும் ஒருவருக்கொருவர் பொருத்தமாக வளர்த்து வந்தான் – எனவே
பாதியில் என் வாழ்வில் வந்தாள் அவள் என்றால் அது சரியல்ல..
“என் நினைவுகள்” என்று கூறுவதும் சிறப்பல்ல..
அவள் இல்லாமல் எனக்கு ஏது நினைவுகள்..
அதனால்,
இந்த பதிப்பில் அவளுடைய பங்கும் சிறப்பாக இருக்கும்..

உங்கள் த.சதீஷ் குமார்

Leave a comment

Quote of the week

“To be beautiful means to be yourself. You don’t need to be accepted by others. You need to accept yourself..”

~ Thich Nhat Hanh